அதிமுக கொள்கை வேறு, பாஜக கொள்கை வேறு மோடி,  ஏன் பார்க்க வேண்டும்? முதல் முறையாக வெகுண்டெழுந்து எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி.!

சென்னை 17 நவம்பர் 2022 அதிமுக கொள்கை வேறு, பாஜக கொள்கை வேறு மோடி,  ஏன் பார்க்க வேண்டும்? முதல் முறையாக வெகுண்டெழுந்து எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி.

* நாடாளுமன்ற தேர்தலில் புதிய கூட்டணி எனவும் சூசகம்

சென்னை: அதிமுக கொள்கை வேறு, பாஜ கொள்கை வேறு. தனிப்பட்ட முறையில் வரும் மோடி, அமித்ஷாவை ஏன் நாங்கள் வரவேற்க வேண்டும் என்று முதல்முறையாக எடப்பாடி பழனிசாமி கொதித்தெழுந்து பேட்டியளித்தார். தொடர்ந்து பாஜ தலைவர்கள் புறக்கணித்து வருவதாலும், சீண்டுவதாலும்தான் அவர் இவ்வாறு கூறியதாக கூறப்படுகிறது. அதோடு புதிய கூட்டணி அமைப்பது குறித்தும் தனது கருத்தை அவர் பாஜ தலைவர்களுக்கு சூசகமாக தெரிவித்துள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டபேரவை எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று சீர்காழியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறும்போது, ‘‘அதிமுக கட்சி வேறு, பாரதிய ஜனதா கட்சி வேறு. தனித்தனி கட்சி. அதிமுக என்பது தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்து வருகிறது. அதிமுக 31 ஆண்டுகாலம் தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ளது. பாரதிய ஜனதா ஒரு தேசிய கட்சி. எப்போ பார்த்தாலும், அமித்ஷா சென்னைக்கு வந்தாலும் சரி, பிரதமர் மோடி தமிழகத்துக்கு வந்தாலும் சரி, எடப்பாடி பழனிசாமி போய் பார்க்கவில்லை என்கின்றனர்.

எங்கள் கட்சி வேறு, அவர்கள் கட்சி வேறு. எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் பிரதமர் மோடி ஏதாவது அரசு நிகழ்ச்சிக்கு வந்தால் போய் பார்ப்போம். அமித்ஷா தனிப்பட்ட நிகழ்ச்சிக்கு வந்தார். அவரை ஏன் எடப்பாடி பழனிசாமி போய் பார்க்கவில்லை என்கின்றனர். நாங்க அதிமுக. எங்களுக்கு ஏதாவது வாய்ப்பு இருந்தால் போய் பார்ப்போம். மற்றபடி போய் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களும் அப்படித்தான். அப்படி ஒரு கருத்தே நிகழவில்லை. 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும். முக்கியமாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு, அதிமுக தலைமையில் அமையும் கூட்டணியில் வாய்ப்பில்லை’’ என்றார்.

எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சு அதிமுக மற்றும் பாஜ வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமித்ஷாவையோ, மோடியையோ தனிப்பட்ட முறையில் வந்தால் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், மோடி அரசு நிகழ்ச்சிக்கு வந்ததால் சென்று பார்த்தேன் என்று தெரிவித்துள்ளார். மோடி அரசு நிகழ்ச்சிக்கு வரவில்லை என்றால் அவரை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளார். ஜனாதிபதியோ, பிரதமரோ அரசு நிகழ்ச்சி மட்டுமல்ல தனிப்பட்ட நிகழ்ச்சிக்கு வந்தாலும் அவரை வரவேற்க வேண்டியது அரசின் கடமை. அதேபோல எதிர்க்கட்சித் தலைவரும் விரும்பினால் வரவேற்கலாம். அதே போலத்தான் மோடியை வரவேற்றதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஒரு கூட்டணியில் உள்ள தலைவர் மோடியை வரவேற்பதை அரசியலாக பார்க்காமல், அரசு பதவி இருப்பதால்தான் பார்ப்பதாக கூறுவது பாஜவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Also  தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளின் கலந்தாய்வை மத்திய அரசு நடத்துவதா? பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி!.!

 மேலும், தனிப்பட்ட முறையில் ஏன் சந்திக்க வேண்டும் என்று கேள்வி கேட்பவர், ஏன் டெல்லி சென்று அமித்ஷாவை பார்க்க வேண்டும். 4 நாள் பயணமாக சென்றவர், மோடி சந்திக்க மறுத்ததும் அடுத்த நாளே ஏன் திரும்பி வரவேண்டும். மோடி, அமித்ஷாவை டெல்லியில் சந்திக்க பல முறை ஏன் நேரம் கேட்டார். அப்போதும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில்தான் பார்த்தாரா? ஓய்வு பெற்ற ஜனாதிபதி கோவிந்துக்கு வழியனுப்பும் விழாவில் அண்ணாமலையுடன் சென்று மோடியை சந்தித்ததும், மோடி பேசாமல் சென்றவுடன் பயணத்தை பாதியிலேயே ரத்து செய்து விட்டு வந்ததும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில்தானா? கூட்டணிக் கட்சித் தலைவர் என்று இல்லையா என பாஜக தலைவர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமியின் இந்த பேட்டி அதிமுக மற்றும் பாஜ தலைவர்கள் மத்தியில் பரபரப்பையும், புகைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. அதோடு அவர் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று இப்போது அடிக்கடி பேசி வருகிறார். ஆனால் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோருக்கு இடம் இல்லை என்பதையும் திட்டவட்டமாக கூறுகிறார். பாமக, தமாகா, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகியவை பாஜ கூட்டணியில் இருப்பதாக ஏற்கனவே அறிவித்து விட்டன. அப்படி என்றால் எடப்பாடி எந்த கட்சியுடன் மெகா கூட்டணி அமைக்கப்போகிறார். ஒரு வேளை அதிமுகவுக்கும், பாஜவுக்கும் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. தனித்து சென்று மெகா கூட்டணி அமைப்பேன் என்று மறைமுகமாக பாஜவுக்கு எச்சரிக்கை மணி அடிக்கிறாரா என்ற சந்தேகமும் பாஜவினர் மத்தியில் எழுந்துள்ளது.

 இதுகுறித்து பாஜ தலைவர்கள் கூறும்போது, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகுதான் அதிமுகவுடன் மோடியால் கூட்டணியை ஏற்படுத்த முடிந்தது. 2019ல் நடந்த மக்களவை தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட்டன. அதில் கூட்டணிக் கட்சிகளுக்கு நாங்கள் தொகுதிகளை பிரித்துக் கொடுக்கிறோம். எங்களுக்கு மொத்தமாக சீட் கொடுங்கள் என்று ஒன்றிய அமைச்சர் பியூஷ்கோயல், எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்தார். எடப்பாடியோ, அதெல்லாம் முடியாது. தமிழகத்தில் நாங்கள்தான் பெரிய கட்சி. நாங்கள்தான் தொகுதிகளை ஒதுக்குவோம். உங்களுக்கு 5 சீட்டுதான். வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி தொகுதிகளை ஒதுக்கினார். அதில் பாமகவுக்கு 7, தேமுதிகவுக்கு 4, தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு சீட் ஒதுக்கியது. அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிட்டது.

Read Also  பிரான்ஸ் அதிபராக மேக்ரான் இமானுவல் மேக்ரான் மீண்டும் தேர்வாகியுள்ளார்!

அதன்பின்னர், 2021ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜ இதே கோரிக்கையை வலியுறுத்தியது. அப்போதும் அதிமுக தன் தலைமையில்தான் கூட்டணி என்று அறிவித்து தொகுதிகளை ஒதுக்கியது. பாஜவுக்கு 20, பாமகவுக்கு 23, தமாகாவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியது. மற்ற உதிரி கட்சிகளுக்கும் சீட் ஒதுக்கியது. அதில் புரட்சி பாரதம் உள்ளிட்ட சில கட்சிகளை தனது சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று அதிமுக நிபந்தனை விதித்தது. அதிமுக ஆளும் கட்சியாக இருந்ததால் மக்களவை மற்றும் சட்டப்பேரவையில் அதிமுக ஒதுக்கும் தொகுதிகளை பாஜ பெற்றது. ஆனால் மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளில் 39 தொகுதிகளை அதிமுக கூட்டணி இழந்தது. ஒரு தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது.

அதுவும் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், தேனி தொகுதியில் வெற்றி பெற்றார்.  தற்போது அதிமுக எதிர்க்கட்சியாக உள்ளது. ஆளும் கட்சியாக இருந்தபோதும், தற்போது எதிர்க்கட்சியாக இருந்தபோதும் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. இதனால் அதிமுக தலைவர்கள் பலர் வெளியேறி திமுகவில் இணைந்து விட்டனர். அதோடு அதிமுக தற்போது 4 அணிகளாக பிரிந்துள்ளன. ஒவ்வொரு அணி தலைவர்களும் தங்களைத்தான் நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்று பாஜ தலைமையிடம் போய் நின்றனர். ஆனால் அவர்களோ ஒற்றுமையாக நில்லுங்கள் என்று அறிவுரை கூறினர். அதில் சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைவதற்கு சம்மதித்தனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோ பன்னீர்செல்வத்ைத இணைக்கத் தயார். ஆனால் அவர் பதவி கேட்கக் கூடாது. மற்ற இருவரும் வேண்டாம் என்று கூறிவிட்டார்.

இதனால் பாஜ என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளது. எடப்பாடியை தங்களது வழிக்கு கொண்டு வர அவருக்கு வேண்டிய காண்ட்ராக்டர்கள், தொழில் அதிபர்கள், உறவினர்களின் வீடுகளில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை மூலம் சோதனை நடத்த உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக உள்ளார். இந்தநிலையில்தான் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார். ஆனால் மோடி அவரை சந்திக்கவில்லை. பியூஷ்கோயல் மூலம் அமித்ஷாவை சந்தித்தார். ஆனால் அப்போதும் அதிமுக தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று அமித்ஷா கூறிவிட்டார். இதனால் 4 நாள் பயணத்தை ரத்து செய்து விட்டு உடனடியாக எடப்பாடி பழனிச்சாமி சென்னை திரும்பி விட்டார். தற்போது மதுரை வந்த மோடியை தனியாக சந்திக்க எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டார்.

ஆனால் மோடி மறுத்து விட்டார். கடந்த வாரம் சென்னை வந்த அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டார். ஒதுக்கவில்லை. இதனால் அமித்ஷா கலந்து கொண்ட விழாவையே எடப்பாடி பழனிசாமி புறக்கணித்து விட்டார். இந்நிலையில் பாஜ மூத்த மாநில நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து அண்ணாமலை, எல்.முருகன் உள்ளிட்ட சில தலைவர்களை மட்டும் தனியாக அழைத்து ஆலோசனை நடத்தினார்.  அப்போது, இந்த முறை மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் பாஜ கூட்டணி வைக்கும். அதேநேரத்தில் பாஜ தலைமையில்தான் கூட்டணி அமையும். தமாகா, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகளுக்கு பாஜதான் சீட் ஒதுக்கும். செலவையும் பார்த்துக் கொள்ளும். அதிமுக அதற்கு ஏற்றார்போல 50 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும். நாம் மற்ற கட்சிகளுக்கு இடங்களை பிரித்துக் கொடுக்கலாம்.

Read Also  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்  செயலாளராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்....

அதிமுக 50 சதவீத இடங்களில் போட்டியிடட்டும் என்று அமித்ஷா கூறியுள்ளார். அதோடு அதிமுகவை வழிக்கு கொண்டு வரும் யுக்தி என்னிடம் உள்ளது. அதை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் இப்போதே தொகுதிகளுக்கு சென்று வேலையை பாருங்கள். பூத் கமிட்டி அமையுங்கள். குறிப்பாக தலைவர்கள் நிற்கும் தொகுதிகளில் நீங்களே வேலையைப் பாருங்கள் என்று கூறிவிட்டார். குறிப்பாக நாகர்கோவிலில் பொன்.ராதாகிருஷ்ணன், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன், திருப்பூர் அல்லது ஈரோட்டில் அண்ணாமலை, நீலகிரியில் எல்.முருகன், ராமநாதபுரத்தில் பொன்.பாலகணபதி, தேனியில் ரவீந்திரநாத், வேலூரில், ஏ.சி.சண்முகம், கள்ளக்குறிச்சியில் பாரிவேந்தர், தென்காசியில் கிருஷ்ணசாமி உள்பட பலருக்கும் தொகுதிகளை பிரித்துக் கொடுத்து, இந்த தொகுதிகளில் நீங்கள் வேலையை ஆரம்பியுங்கள்.

அதிமுக நாம் கேட்கும் தொகுதிகளை கொடுப்பார்கள். மீதம் உள்ள 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் என்று கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாஜ மற்றும் அதன் கூட்டணிக் கட்சி தலைவர்கள் இப்போதே தொகுதிகளில் வேலைகளை தொடங்கிவிட்டனர்.  அதிமுகதான் தொகுதிகள் பற்றிய முடிவு எடுக்காமலும், அதிமுகவே இருக்குமா என்று தெரியாமலும் குழப்பத்தில் உள்ளது. இதனால் அதிமுக கூட்டணியில் தொடர்ந்து குழப்பங்கள் உள்ளன. அதோடு தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி குறித்து தனது நிலைப்பாட்டை அமித்ஷா, எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அமித்ஷாவின் திட்டத்தை ஏற்றுக் கொண்டால், பாஜ கூட்டணியில் அதிமுக போட்டியிடும். இல்லாவிட்டால் அதிமுக என்ற கட்சி இல்லாமல் புதிய கட்சியின் பெயருடன் எடப்பாடி பழனிசாமி தனித்து போட்டியிடக் கூடிய நிலைதான் ஏற்படும். இதைத்தான் மறைமுகமாக எடப்பாடி பழனிசாமி, அதிமுக தலைமையில் மெகா கூட்டணி என்று பாஜவை மிரட்டி வருகிறார் என்கின்றனர். எடப்பாடி பழனிசாமியின் இந்த திடீர் பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *