ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ, அவரது குடும்பத்தினரோ எந்த சதித்திட்டமும் தீட்டவில்லை: ஓ.பன்னீர்செல்வம் வாக்கு மூலம்
சென்னை 22 மார்ச் 2022 ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ, அவரது குடும்பத்தினரோ எந்த சதித்திட்டமும் தீட்டவில்லை: ஓ.பன்னீர்செல்வம் வாக்கு மூலம்.
2011-12 ஆண்டு மற்றும் அதற்கு பிந்தைய ஆண்டுகளிலும் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் சதித்திட்டம் தீட்டியதாகவோ அல்லது அது தொடர்பாக எவ்வித தகவலையும் காவல்துறை திரட்டவில்லை என ஆணையத்தில் ஆஜரான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் வாக்குமூலம் அளித்திருப்பதை சுட்டிக்காட்டி சசிகலா தரப்பு வழக்கறிஞர் பன்னீர்செல்வத்திடம் கேள்வி எழுப்பினார்.
தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார்.
அவரது மரணத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததை தொடர்ந்து இது தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையத்தில் பலரும் ஆஜராகி விளக்கமளித்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் நேற்றும் இன்றும் ஆஜராகி விளக்கமளித்தார்.
நேற்றைய தினம், ஜெயலலிதாவுக்கு அளிக்கப் பட்ட சிகிச்சைகள் குறித்து தனக்கு தெரியாது என்றும் மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கேமராக்களை தான் அகற்ற கூறவில்லை என்றும் அவர் கூற்யிருந்தார்.
இந்நிலையில், இன்று ஓ. பன்னீர்செல்வம் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான போது, 2011-12 ஆண்டு மற்றும் அதற்கு பிந்தைய ஆண்டுகளிலும் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் சதித்திட்டம் தீட்டியதாகவோ அல்லது அது தொடர்பாக எவ்வித தகவலையும் காவல்துறை திரட்டவில்லை என ஆணையத்தில் ஆஜரான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் வாக்குமூலம் அளித்திருப்பதை சுட்டிக்காட்டி சசிகலா தரப்பு வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், சாட்சியங்கள் ஆணையத்தில் கூறியது சரி தான் என பதிலளித்தார்.