சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென பற்றி எரிந்ததால் பரபரப்பு!
சென்னை 14 ஜூன் 2022 சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென பற்றி எரிந்ததால் பரபரப்பு!
சென்னை காமராஜர் சாலையில் ஓடும் கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அண்ணாசாலை பகுதியை சேர்ந்தவரும் புதுப்பேட்டையில் கார் உடைக்கும் கடை வைத்திருக்கும் இதயத்துல்லா என்பவர் அடையாறில் இருந்து தனது கடைக்கு சான்ட்ரோ கார் ஒன்றை பழுது பார்ப்பதற்காக கொண்டு சென்றுள்ளார்.
காமராஜர் சாலை கண்ணகி சிலை அருகே செல்லும்போது காரில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டு திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் உடனடியாக காரை ஓரமாக நிறுத்தி விட்டு காரில் இருந்த இதயத்துல்லா மற்றும் அவரது நண்பர்கள் வெளியேறியுள்ளனர்.
அந்த இடத்திலேயே கார் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
இது தொடர்பாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்து அதன் அடிப்படையில் மயிலாப்பூர் தீயணைப்பு வாகனத்தில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை முற்றிலுமாக அணைத்தனர்.
போக்குவரத்து நெரிசல் உச்சமாக இருக்கும் நேரத்தில் தீ விபத்து நிகழ்ந்ததால், சற்று போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து போக்குவரத்து போலீசார் உதவியுடன் தீ விபத்தில் கருகிய காரை தீயணைப்பு வீரர்கள் அப்புறப்படுத்தினர்.
இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.