ஒரே வருஷத்தில் 9 முறை விலை உயர்வு மத்திய அரசை வறுத்தெடுத்த அன்புமணி ராமதாஸ்.
சென்னை 23 மார்ச் 2022 ஒரே வருஷத்தில் 9 முறை விலை உயர்வு மத்திய அரசை வறுத்தெடுத்த அன்புமணி ராமதாஸ்.
சமையல் எரிவாயு விலை உயர்வு ஏழை எளிய நடுத்தர மக்களால் சமாளிக்க முடியாது எனவே இதை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டுமென பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் அடிக்கடி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதைக் கட்டுப்படுத்த வேண்டுமென நாடு முழுவதும் கோரிக்கை எழுந்தவண்ணம் உள்ளது. ஆனால் மத்திய அரசு அதை பெரிய அளவில் பொருட்படுத்தாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய சட்டமன்ற தேர்தலையொட்டி பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. தற்போது தேர்தல் முடிந்துள்ளதால் மீண்டும் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர தொடங்கியுள்ளது.
மார்ச் 22ஆம் தேதி முதல் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி கடைசியாக உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் விலை உயர்ந்துள்ளது. மத்திய அரசின் இந்த விலையேற்றத்தை பலரும் கடுமையாக கண்டித்து வருகின்றனர். அந்த வரிசையில் சமையல் கேஸ் சிலிண்டர், பெட்ரோல் எரிபொருள் மீதான விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விவரம் பின்வருமாறு:-
ரூ.50 சமையல் எரிவாயு விலை உயர்வை மக்களால் தாங்க முடியாது எனவே அதை திரும்ப பெற வேண்டும், 1. சமையல் எரிவாயு விலை உருளைக்கு ரூ.50 உயர்த்தப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து சென்னையில் ஒரு சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.965.50 ஆக அதிகரித்திருக்கிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை சமாளிக்க முடியாமல் தவித்து வரும் ஏழை மற்றும் நடுத்தர மக்களால் இதை தாங்க முடியாது!
சமையல் எரிவாயு விலை கடந்த ஓராண்டின் 9 தவணைகளில் ரூ.255 உயர்த்தப்பட்டிருக்கிறது. இது 36% உயர்வு ஆகும். மக்களின் வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவையான சமையல் எரிவாயு விலை ஓராண்டில் 36% உயர்த்தப்படுவது எந்த வகையிலும் நியாயமற்றது. இதை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.