கரும்புக்கு ரூ.195 ஊக்கத் தொகை விரைவில் தமிழக அரசு அறிவிப்பு!
சென்னை 12 டிசம்பர் 2022 கரும்புக்கு ரூ.195 ஊக்கத் தொகை விரைவில் தமிழக அரசு அறிவிப்பு!
கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவது குறித்து தமிழ்நாடு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில், கரும்பு சாகுபடிப் பரப்பு குறைந்து சர்க்கரை ஆலைகள் நலிவடைந்து வந்த சூழ்நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைக் கிணங்க கடந்த இரண்டு ஆண்டுகளாக, கரும்பு விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும், சர்க்கரை ஆலைகளின் திறனை மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசு, அதிக கரும்பு மகசூலுடன், அதிக சர்க்கரை கட்டுமானமும் தரக்கூடிய கரும்பு இரகங்களை பிரபலப்படுத்துதல், கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை, சொட்டு நீர் பாசனம், கரும்பு அறுவடை இயந்திரங்கள், சர்க்கரை ஆலைகளில் புனரமைப்பு, இணைமின் திட்டம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழக கரும்பு விவசாயிகளுக்கு 2021-22 அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய அனைத்து விவசாயிகளுக்கும் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.195 வழங்கும் சிறப்பு ஊக்கத் தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 7 ஆம் தேதி 2021-22 அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு, சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, 2021-22 அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளில் பதிவு செய்து, கரும்பு வழங்கிய தகுதி வாய்ந்த விவசாயிகளின் விபரத்தை சேகரித்து, கூர்ந்தாய்வு செய்து, சிறப்பு ஊக்கத் தொகையினை விரைவில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்க சர்க்கரைத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.